முதல்வர் விஜய் இன்று டெல்லி செல்வதால், இன்று தொடங்கி வைக்க இருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முதல்வர் விஜய், அதன் பிரம்மாண்ட தொடக்க விழாவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், அன்று மாலை சென்னை கோட்டையில் தனது அலுவலக அறையில் அமர்ந்தவுடன் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் மிக முக்கியமானது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை’ திட்டமாகும்.

இந்த திட்டம் உடல் ரீதியான வன்முறை, பாலியல் தொல்லைகள், ஆன்லைன் ஸ்டாக்கிங், மிரட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படும் போலி செய்திகள் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உட்பட்ட எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் அடங்கிய படை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

மாநிலத்தின் 37 முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு இந்தப் படை தொடர்ச்சியான ரோந்துப் பணியிலும், உடனடி பதில் நடவடிக்கையிலும் ஈடுபடும். மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு ஆலோசனை மையங்களையும் இயக்கி, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும். இன்று (மே 27) சென்னையில் பிரம்மாண்ட அரசு விழாவாக இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி புறப்பட உள்ளதால் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் முதல்வர், பிரதமரிடம் தமிழகத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்.

இந்த முதல் சந்திப்பு இரு தரப்புக்கும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்து சில நாட்களில் ‘சிங்கப்பெண்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபகாலமாக தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் புதிய திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் இரவு நேரப் பயணங்கள், பொது இடங்களில் பாதுகாப்பின்மை, சமூக ஊடகத் தொல்லைகள் போன்ற பிரச்னைகள் நீடித்து வரும் சூழலில், இந்த சிறப்பு அதிரடிப் படை ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என பெண்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன. முதல்வர் விஜய்யின் இந்த உடனடி முயற்சி, தமிழகத்தில் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என அரசியல் விமர்சகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version