வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், ஓம் சக்தி கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அமைதியான குடியிருப்பு பகுதியாக உள்ள இந்தத் தெருவில், கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் வீடு வீடாகச் சென்று கதவுகள் மற்றும் இரும்பு கேட்களை தட்டிவிட்டு உடனடியாக மறைந்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிவிட்டு சற்று தூரத்தில் நின்று அந்த வீட்டிலிருந்து யாரேனும் வெளியே வருகிறார்களா என்பதை கண்காணித்தது பதிவாகியிருந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வீடுகளில் இருந்து யாரும் வெளியே வராதபட்சத்தில், அந்த வீட்டில் யாரும் விழித்திருக்கவில்லை அல்லது வீட்டில் யாரும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் மற்றொருவருக்கு சைகை மூலம் தகவல் தெரிவிப்பது போன்ற நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். இதனால், எதிர்காலத்தில் திருட்டு சம்பவங்களை நடத்துவதற்காக முன்கூட்டியே வீடுகளை கண்காணித்து ஒத்திகை பார்க்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.
இதன் காரணமாக, இரவு நேரங்களில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், பெண்கள், முதியவர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடு வீடாக கதவைத் தட்டி மறையும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், ஓம் சக்தி கோவில் தெருவில் வசிக்கும் மக்களிடையே அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது.
