கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி புதரில் வீசப்பட்ட 3 வயது வடமாநில பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களுடன் குடியேறி வாடகை வீடுகளில் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து பல்வேறு இடங்களில் குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னரும் குழந்தை கிடைக்காததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அப்போது அருகிலுள்ள முட்புதர் பகுதியில் இயற்கை உபாதைக்காகச் சென்ற சில பெண்கள், காயமடைந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை கண்டுபிடித்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், அருகில் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் குற்றச்சாட்டுக்குட்பட்ட இளைஞரை பிடித்து தாக்கிய பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஒருவருக்கு மேற்பட்டோர் தொடர்புடையிருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பிபின் மஞ்சி என்பவரை கைது செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version