ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரூ.97.02 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத் துறையின் நிலக்கீல் மற்றும் திண்காரை தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக் கட்டிடம் திறக்கப்பட்டது. தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்த விழாவில் பங்கேற்று, ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு பாராட்டினார். முதலமைச்சர் விஜய், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் பணிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்து வருகிறார்.

இந்திய அளவில் முதன்முறையாக, ஐந்தாண்டுத் திட்டம் போன்ற முறையில் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுத்துத் தந்துள்ளார். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, விரிவான முன்னேற்றத்தை உறுதி செய்கிறார். இவரது ஆட்சியை தமிழ்நாட்டின் பொற்காலம் என அழைக்கலாம் என்று புகழாரம் பாடினார்.உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி வருவதாகவும், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு மிக எளிமையான முறையில் மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து வருவதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து கோட்டையில் அமர்ந்து மக்கள் பணிகளை ஆற்றி வருகிறார். வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் விரிவான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.எல் நினோ பாதிப்புகளை ஆராய இந்திய அளவில் புதிய முயற்சியை முதலமைச்சர் தொடங்கியுள்ளார். சிறந்த வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், வடகிழக்கு பருவமழை குறித்தும் தனிக் குழு ஆய்வு செய்கிறது.

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விவசாயிகளுடன் கலந்தாலோசித்து, மழைச் சூழலைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.பூரண மதுவிலக்கை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசு, கோவில்கள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மக்கள் கோரிக்கையின் பேரில் அகற்றி வருகிறது. இது வரலாற்றுச் சாதனையாகும். மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிமுக சார்பில் எழுப்பப்பட்ட குதிரைப் பேரம் புகாருக்கு பதிலளித்த அமைச்சர், “41 எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் ஆகலாம் என்று அவர்கள் சொன்னாரா இல்லையா என்பதை அவர்களே நெஞ்சில் கை வைத்துச் சொல்ல வேண்டும். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் தெளிவுபடுத்திய பின்னரும் பதில் இல்லை. வட துருவமும் தென் துருவமும் இணையாதது போல், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக ஒன்றிணைய முடியாது என்பதை இது காட்டுகிறது” என்றார்.

பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்க முடியாது என்றும், திருமண ஏற்பாடுகள் போல் படிப்படியாக நடைபெறும் என்றும் விளக்கினார். தொகுதி மறுசீரமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ கடிதங்கள் வரும் போது முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version