மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் ஈரான் – அமெரிக்க போர் பதற்றங்களுக்கு இடையே, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய நிம்மதி கிடைத்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து கடந்த 1-ம் தேதி பல கோடி லிட்டர் கச்சா எண்ணெய் பேரல்களுடன் புறப்பட்ட முதல் சரக்குக் கப்பல், உலகிலேயே மிகவும் அபாயகரமான பகுதியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து இன்று மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. ஈரான் – இஸ்ரேல் மோதலுக்குப் பிறகு இந்தப் பாதையை பாதுகாப்பாகக் கடந்த முதல் பெரிய சரக்குக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/ANI/status/2031997649247965235
மும்பை வந்தடைந்துள்ள இந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ள கச்சா எண்ணெய், உடனடியாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நிலவி வந்த சமையல் எரிவாயு (LPG) மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்த கவலைகளை இந்த வரவு சற்று தணித்துள்ளது. கச்சா எண்ணெய் வரத்து சீராகத் தொடங்கியுள்ளதால், சந்தையில் நிலவிய பதற்றம் குறைந்துள்ளதாகவும், இனி வரும் நாட்களில் விநியோகத்தில் எவ்விதத் தங்குதடையுமின்றி செயல்பட முடியும் என்றும் பெட்ரோலியத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மேலும் இரண்டு பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியா நோக்கிப் புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளியுறவுத் துறையின் ராஜதந்திர முயற்சிகளால், இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களுக்கு அந்தப் பாதையில் சிறப்புப் பாதுகாப்பு அல்லது அனுமதி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் முழுமையாக நீங்கிவிட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் எரிபொருட்களைச் சேமிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
