மத்திய கிழக்கு போரினால் உலக நாடுகளின் எரிசக்தி போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில், இந்தியாவுக்குச் சாதகமான ஒரு முக்கிய முடிவை ஈரான் அரசு எடுத்துள்ளது. பாரசீக வளைகுடாவின் மிக முக்கியமான நுழைவாயிலான ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனை NDTV செய்தி நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் ‘புஷ்பக்’ (Pushpak) மற்றும் ‘பரிமல்’ (Parimal) ஆகிய இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை எவ்வித இடையூறுமின்றி வெற்றிகரமாகக் கடந்துள்ளன. தற்போது இந்தக் கப்பல்கள் இந்தியாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல அஞ்சும் நிலையில், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வரத்து தடையின்றித் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குத் தேவையான எரிபொருள் வரத்து சீராகியுள்ளதால், நாட்டில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. போர் காரணமாக விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஏற்படும் என்று மக்கள் மத்தியில் நிலவிய அச்சத்தை இந்தத் தகவல் போக்கியுள்ளது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் எரிபொருள் விலையில் நிலவும் பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
