நாடு முழுவதும் நிலவும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபை தொடங்கிய முதலே எரிவாயு தட்டுப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தைத் தொடர்ந்து, மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்கள் அன்றாடம் சந்திக்கும் மிக முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசு முறையான பதில் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
சபை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “சிலிண்டரையும் காணவில்லை, பிரதமரையும் காணவில்லை” என்ற முழக்கங்களை எழுப்பிய அவர்கள், நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வராமல் தவிர்ப்பதாகச் சாடினர். கையில் காலி சிலிண்டர்களை ஏந்தியபடி, எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தவறிவிட்டதாக அவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வெளியுறவுக் கொள்கை குறித்தும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டதாகவும், அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கையாள மத்திய அரசு திணறுவதாகவும் அவர்கள் கோஷமிட்டனர். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யாமல், சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிந்து மக்கள் நலனைப் பிரதமர் அடகு வைத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் சரமாரியாகக் குற்றம் சாட்டினர்.
