காங்கோவில் தீவிரமடைந்து வரும் எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா அவசரகால மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசு (டிஆர்சி) மற்றும் உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவது உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) இதை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என அறிவித்துள்ளது. இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதால் அனைத்து நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு WHO அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியா உடனடியாக உதவி கரம் நீட்டியுள்ளது. ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையத்துக்கு (Africa CDC) நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சைப் பொருட்கள், தொற்றுக் கட்டுப்பாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அவசர மருத்துவப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. இந்த உதவிப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவாக விநியோகிக்கப்படும் என ஆப்ரிக்க மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அரசும் மக்களும் தாராளமாக நன்கொடை அளித்ததற்கு ஆப்ரிக்க மையம் நன்றி தெரிவித்துள்ளது. உயிர்களைப் பாதுகாக்கவும், சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக அந்த அமைப்பு பாராட்டியுள்ளது.
எபோலா என்பது மிகவும் ஆபத்தான வைரஸ் தொற்று. காய்ச்சல், உடல் வலி, வாந்தி, இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, சிகிச்சை கிடைக்காவிட்டால் விரைவில் உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்த முறை Bundibugyo வகை வைரஸ் காரணமாக பரவுகிறது. காங்கோவில் Ituri, Nord-Kivu, Sud-Kivu மாகாணங்களில் பரவல் அதிகம். உகாண்டாவில் Kampala உள்ளிட்ட இடங்களிலும் வழிப் பயணிகள் மூலம் பரவியுள்ளது.
தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தேக நோயாளிகள் பதிவாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போர், மக்கள் இடப்பெயர்வு, சுரங்கத் தொழில், எல்லைத் தாண்டல் போன்ற காரணங்களால் பரவல் வேகமாக உள்ளது. உகாண்டா எல்லையைத் தற்காலிகமாக மூடியுள்ளது. பொது நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் உதவி மிக முக்கியமானது. மருத்துவக் கருவிகள், பாதுகாப்பு உடைகள், சிகிச்சைப் பொருட்கள் ஆகியவை முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்தியா உலக அளவில் மனிதாபிமான உதவியில் முன்னணியில் உள்ளது என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது.
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணம் செய்பவர்கள் WHO வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். கைகழுவுதல், தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுதல் போன்றவை முக்கியம். இந்திய அரசு காங்கோ, உகாண்டா, தென் சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்தியாவின் உதவி ஆப்ரிக்க மக்களின் உயிர்களைப் பாதுகாக்க உதவும் என நம்பலாம்.
