மூன்று இடங்களில் ரேடார் கருவிகள் மூலம் மழையின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் விஜய்யின் நேரடி அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தினசரி அடிப்படையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். “முதலமைச்சரின் கனவுப்படி தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறினார். தற்போது அந்தமானில் ஒரு வாரமாக தொடர்ச்சியான மழை பெய்து வரும் நிலையில், கேரளாவிலும் மழை தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டின் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் எதிரொலிக்கக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளில் மழை அளவை துல்லியமாக கண்காணிக்க நாள்தோறும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று இடங்களில் நிறுவப்பட்ட ரேடார் கருவிகள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக பல்வேறு அரசு நிறுவனங்கள், தன்னார்வ சமூக அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மத்திய அரசும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் ஹெலிகாப்டர் உள்ளிட்ட வசதிகளை வழங்க உறுதியளித்துள்ளது. தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை. மழையின் தீவிரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால் தொடர்ச்சியான கண்காணிப்பு முக்கியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
மழை அதிகம் பெய்யக்கூடிய பகுதிகளில் மின்சாரத் துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளதால் வரும் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்க எந்தத் தடையும் இல்லை என்று அமைச்சர் அறிவித்தார். வெயில் தாக்கம் 41 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வெயில் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் தான் ஜூன் 1ஆம் தேதி திட்டமிடப்பட்ட பள்ளி திறப்பு 4ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது என்றார்.
நிலச்சரிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் வழக்கம் உண்டு. ஆனால் வயநாட்டில் ஏற்பட்டதுபோல் தமிழ்நாட்டில் நடைபெறாது. அங்கு புதிதாக நிலங்கள் வாங்கி இயற்கையை பாதித்த வகையில் கட்டுமானங்கள் எழுந்தன. முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான செயல்கள் அனுமதிக்கப்படாது” என்று உறுதியளித்தார். மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, அது உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கேட்க வேண்டிய விஷயம் என்று அவர் பதிலளித்தார்.
