ஐபிஎல் தொடரைப் போன்றே ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ப்ரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் இடம்பெறும் இத்தொடரில் ஐபிஎல்-ஐ போன்றே வீரர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். இதுவரை 11 தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. பாட்னா அணி அதிகபட்சமாக 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கடந்தாண்டும் பாட்னா இறுதி போட்டியில் ஹரியானா அணியுடன் மோதியது. போட்டி முடிவில் ஹரியானா அணி பாட்னாவை வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

12-வது ப்ரோ கபடி லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வரும் 31 மற்றும் ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக 8 வீரர்கள் தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தமாகினர். தமிழ் தலைவாஸ் அணி ரூ.2.15கோடிக்கு சச்சின் தன்வரை வாங்கியது. இதுபோல் இம்முறை நிறைய வீரர்கள் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி அணிகள் அனைத்தும் தற்போது தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி தமிழ் தலைவாஸ் அணி சாகர், ஹிமான்ஷு மற்றும் மொயின் ஷபாகி ஆகியோரை தக்க வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியுள்ள ப்ரோ கபடி லீக் சேர்மன் அனுபம் கோஸ்வாமி, “புரோ கபடி லீக் 12வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் மே 31ல் துவங்குகிறது. சிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்து, வலுவான அணியை தேர்வு செய்ய ஒவ்வொரு அணி உரிமையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.
