கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடந்த 2 தினங்களாக கோவையில் மழை பெய்து வருகிறது.
இதனால், கோவை – பாலக்காடு சாலை, குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மரம் சாய்ந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது.
மரம் சாய்ந்த சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு கார், சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மழைக்காலத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மரம் விழுதல் அல்லது மின்சார வயர்கள் அறுந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடந்தால், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த குழுவினர் தயாராக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையின் பல்வேறு பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீர் தேக்கத்தைத் தடுக்கும் பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.