தமிழக அரசின் நிதி மேலாண்மை மற்றும் பொது நிதி நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார்.
2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய ஐந்தாண்டு கால நிதித் தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதோ அல்லது அரசியல் ரீதியான விமர்சனங்களோ இன்றி, மாநிலத்தின் உண்மையான நிதி நிலையை ஆதாரங்களுடன் பொதுமக்கள் முன் வைப்பதே இந்த அறிக்கையின் முதன்மை நோக்கம் என அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மரிய வில்சன் தெரிவித்தார்.
இந்த வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் நிதி நெருக்கடிக்கு காரணமாக சொல்லப்படும் மிக முக்கியமான 6 அம்சங்கள் இங்கே…
1) இருமடங்காக உயர்ந்த கடனும் தனிநபர் கடன் சுமையும்
கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய ஐந்தாண்டுகளில் தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் சுமை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தக் கடன்: கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.5.13 இலட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் நிலுவைக் கடன், தற்போது (2025-26 முதல்நிலைக் கணக்கின்படி) ரூ.10 இலட்சம் கோடியாக உயர்ந்து, ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்துள்ளது.
தனிநபர் கடன்: கடன் சுமையின் இந்த அசுர வளர்ச்சியால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ரூ.67,087-லிருந்து (2020-21) 92% உயர்ந்து ரூ.1,28,934 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மாநில அரசு வாங்கியுள்ள ரூ.4.87 இலட்சம் கோடி கடனானது, தமிழ்நாடு மாநிலம் உருவான முதல் 60 ஆண்டுகளில் திரட்டிய மொத்தக் கடனை விட அதிகமாகும்.
2) வருவாய் பற்றாக்குறை: கோவிட் காலத்தையும் மிஞ்சிய உச்சம்
அரசின் அன்றாட வரவினங்களுக்கும் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறிப்பதே வருவாய் பற்றாக்குறையாகும்.
2021-22-ல் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை, 2025-26 நிதியாண்டில் ரூ.78,324 கோடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இது கோவிட் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த ஆண்டை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா, குஜராத் போன்ற இணை மாநிலங்கள் தங்களின் நிதிநிலையைச் சீரமைத்து வரும் வேளையில், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை மட்டும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 2.22% ஆக சரிவைச் சந்தித்துள்ளது.
3) வட்டிச் சுமையால் முடங்கும் மூலதனச் செலவினங்கள்
மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் (பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள்) செய்யப்படும் முதலீடே மூலதனச் செலவினம் எனப்படும். ஆனால், தற்போதைய சூழலில் வட்டிச் செலவினம் மூலதன முதலீட்டை விழுங்கி வருகிறது.
2025-26 நிதியாண்டு கணக்குப்படி, தமிழக அரசின் வட்டிச் செலவினம் ரூ.67,050 கோடியாக உள்ள நிலையில், மூலதனச் செலவினமோ வெறும் ரூ.50,911 கோடி மட்டுமே.
சுருக்கமாகச் சொன்னால், புதிய சொத்துக்களை உருவாக்க அரசு செலவிடும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும், பழைய கடன்களுக்கான வட்டியாக மட்டும் ரூ.1.32 செலுத்த வேண்டியுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு (34.8%) வட்டி கட்டவே செலவாகிறது.
4) சொந்த வரி வருவாயில் சரிவு மற்றும் கட்டமைப்புப் பிரச்சினைகள்
ஒரு காலத்தில் இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாய் சதவீதம் (SOTR/GSDP) 5.93%-லிருந்து 5.45% ஆக சரிந்துள்ளது.
வணிக வரிகள் மற்றும் ஜிஎஸ்டி (GST) வளர்ச்சியில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் சொத்துப் பதிவுகளில் நிலவும் வழிகாட்டு மதிப்புகளின் குறைபாடுகள், கனிமவளத் துறை மற்றும் ஆயத்தீர்வை (மதுபான வருவாய்) துறைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வருவாய் இழப்புகள் இதற்கு முக்கியக் காரணங்களாக அமையலாம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தப்பிக்க முடியாத செலவினங்கள்‘ (Committed Expenditure)
அரசு தவிர்க்கவே முடியாத கட்டாயச் செலவுகளான அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடனுக்கான வட்டி ஆகியவை ‘பொறுப்பேற்றச் செலவினங்கள்’ எனப்படும்.
மாநிலத்தின் மொத்த வருவாய் வரவினங்களில் இத்தகைய கட்டாயச் செலவுகள் மட்டுமே 64.4 சதவீதத்தை (ரூ.1,89,115 கோடி) ஆக்கிரமிக்கின்றன.இது தவிர, சட்டப்பூர்வ மானியங்கள் மற்றும் பிற கட்டாயச் செலவுகளையும் சேர்த்தால் மொத்த வருவாயில் 87% முன்கூட்டியே முடிவாகிவிடுகிறது.
இதன் விளைவாக, புதிய மக்கள் நலத் திட்டங்களையோ அல்லது மாநிலத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களையோ செயல்படுத்த அரசின் வசம் இருப்பது வெறும் 13% நிதி மட்டுமே. இதனால் புதிய திட்டங்களுக்கு மீண்டும் கடன் வாங்க வேண்டிய நச்சுச் சுழற்சி உருவாகிறது.
6) பொதுத்துறை நிறுவனங்களின் மறைமுகக் கடன்கள் (Hidden Liabilities)
அரசு நேரடியாக வாங்கும் 10 இலட்சம் கோடி ரூபாய் கடன் தவிர, அரசின் உத்தரவாதத்துடன் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களையும் சேர்த்தால், தமிழகத்தின் உண்மையான ஒட்டுமொத்தக் கடன் பொறுப்பு ரூ.13.18 இலட்சம் கோடியாகும்.
மின்சார வாரியம் (TNEB): மின் வாரியத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2,47,130 கோடியாகவும், அதன் திரண்ட இழப்பு ரூ.1,82,361 கோடியாகவும் உள்ளது.
போக்குவரத்துக் கழகங்கள்: அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்த இழப்பு ரூ.72,667 கோடியைத் தாண்டியுள்ளது. பேருந்துகளை இயக்குவதில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.78.81 செலவாகும் நிலையில், வருவாயோ வெறும் ரூ.25.97 மட்டுமே கிடைக்கிறது (கிலோமீட்டருக்கு ரூ.52.84 இழப்பு).
எதிர்கால சவால்கள்
இந்த நிதி நெருக்கடிகளுக்கு நடுவே, தமிழகத்தின் மக்கள் தொகை அமைப்பும் வேகமாக மாறி வருகிறது. வரும் 2031-க்குள் தமிழக மக்கள் தொகையில் முதியோர்களின் பங்கு 18.2% ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும் போது, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் குறையும். அதே நேரத்தில் முதியோர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவச் செலவுகள் பல மடங்கு அதிகரிக்கும்.
இதனை ‘கத்தரிக்கோல் விளைவு’ (Scissors Effect) என அறிக்கை எச்சரிக்கிறது. அதாவது, வருவாய் வரும் வழி சுருங்கி, கட்டாயச் செலவுகள் விரிவடைந்து கொண்டே போகும் ஆபத்தான சூழலை நோக்கி தமிழ்நாடு நகர்கிறது.
மொத்ததில் தமிழகம் தனது தற்போதைய கட்டமைப்பு ரீதியான நிதிப் பற்றாக்குறையைச் சீரமைக்க கடுமையான மற்றும் வெளிப்படையான நிதிச் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை இந்த அறிக்கை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது என்கிறார்கள் நிதித் துறை வல்லுநர்கள்.
– பா. முகிலன்

