விஜயின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு மாற்றி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை ஒட்டி இன்று ரிலீசாக இருந்தது. ஆனால், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளை நீக்கும்படி தணிக்கை வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதை எதிர்த்து ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று காலை மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகனுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை குழு சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இன்றே மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஏன் அவசரம், 2 நாட்களில் முடிவெடுக்கும் அளவுக்கு என்ன அவசரம், சான்றிதழ் இல்லாமல் எப்படி படத்தை வெளியிடுவீர்கள், தணிக்கை சான்றிதழுக்காக காத்திருக்க முடியாதா?, படத்தை ரிலீஸ் செய்ய தேதியை அறிவித்துவிட்டு நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுப்பதா என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.
மேலும், ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு செயல்பட தடை விதிக்கப்பட்டதுடன், ஜனநாயகன் அவசர வழக்கு இல்லை என கூறி படத்தின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
