நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5 போன்ற ஓடிடி (OTT) தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை மத்திய தணிக்கை வாரியத்தின் (CBFC) நேரடி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘சட்லஜ்’ (Satluj) என்ற திரைப்படம் சமீபத்தில் ஏற்படுத்திய  சர்ச்சையே மத்திய அரசின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. தணிக்கை வாரியம் விதித்த 127 வெட்டுகளுக்கு அஞ்சி, திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இப்படம் தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் மத்திய அரசு தலையிட்டு, வெளியான 48 மணி நேரத்திற்குள் இப்படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்க உத்தரவிட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் தணிக்கை வாரியத்தின் சான்றிதழைக் கட்டாயமாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் (IT Rules) திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சகங்களுக்கிடையேயான குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான கொள்கை மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள்  வெளியாகி உள்ளன. இந்த புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், தணிக்கை வாரியத்தின் அனுமதியின்றி ஓடிடி தளங்கள் தன்னிச்சையாகப் படங்களை வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version