1976 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த விவேக் ஓபராய் 2002 ஆம் ஆண்டு கம்பெனி என்கிற திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். தன்னுடைய அப்பா சுரேஷ் ஓபராயின் பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய சொந்த உழைப்பால் பட வாய்ப்பு பெற்ற பெருமை விவேக் ஓபாராய்க்கு உண்டு. கம்பெனி திரைப்படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக நல்ல கதைகளை தேர்வு செய்து இன்றுவரை ஒரு நல்ல நடிகராக வில்லன் ஆக பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் வெளிப்படையாக பதில் அளித்து இருக்கிறார்.
என்னுடைய கல்லூரி நாட்களில் நான் ஸ்டாக் மார்க்கெட் குறித்து நிறைய ஆராய்ச்சி செய்தேன். அதை நன்கு கற்றுக் கொண்டேன். பின்னர் 20 முதல் 25 லட்ச ரூபாய் முதலீட்டில் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்தேன். என்னுடைய 19 வயதில் ஆரம்பித்த அந்த கம்பெனி மூலம் நான் ஈட்டிய வருவாய் 12 கோடி இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது முதல் கோடியை பதினாறு அல்லது பதினேழு வயதில், டீனேஜராக இருந்தபோது ஈட்டியதாக கூறியுள்ளார். இந்த தொகை பணமாக அல்லாமல், பங்குச்சந்தையில் உள்ள ஷேர் மற்றும் ஸ்டாக்காக இருந்தாக கூறியுள்ளார்.
மேலும் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைக்கு முன்பு அவரது குடும்பம் ஒரு காலத்தில் பெரிய எஸ்டேட்கள் மற்றும் பிரமாண்டமான குடியிருப்புகளை வைத்திருந்ததாகவும் விவேக் பகிர்ந்து கொண்டார். ஆனால் அந்த பிரிவினை ஏற்பட்ட பின்ன அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒன்றுமில்லாமல் மீண்டும் தொடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அந்த அனுபவம் கடின உழைப்பின் மூலம் தனது சொந்த செல்வத்தை உருவாக்க வேண்டும் என்கிற ஒரு தன்னம்பிக்கையை தனக்கு தந்ததாகவும் கூறியுள்ளார்.
இன்று விவேக் ஓபராய் பல்வேறு துறைகளில் பல வணிகங்களை நடத்தி வருகிறார். இவற்றில் ஒரு ஃபின்டெக் நிறுவனம், ஒரு எட்டெக் நிறுவனம், சாலையோர பாதுகாப்பு உதவி சேவை, ஆய்வகத்தால் வளர்க்கப்படும் வைர நகை பிராண்ட் மற்றும் ஒரு உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் அடங்கும். இந்த நிறுவனங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். தான் படங்களில் பணிபுரியும் போது கூட, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 16 மணிநேரம் வேலை செய்ய முயற்சிப்பதாகவும், தனது விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரத்தை வேலை நேரத்திற்கு ஒதுக்கி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
விவேக் ஓபராய் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் துபாய்க்கு குடி பெயர்ந்து உள்ளார். அங்கு சென்ற பிறகு, இந்தியாவின் வளர்ச்சிக்கு NRIக்கள் எவ்வளவு பங்களிக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். NRIக்கள் ஒவ்வொரு ஆண்டும் 136 பில்லியன் டாலர்களை அனுப்புகிறார்கள், இது இந்தியாவின் வர்த்தக இருப்பில் கிட்டத்தட்ட பாதியாகும் என்று கூறியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் தொண்டு பணிகளுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்து சுமார் 40 மில்லியன் டாலர்களை திரட்டவும் விவேக் ஓபராய் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் 1200 கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரர் ஆன விவேக் ஓபராய் கடைசியில் பகிர்ந்து கொண்ட விஷயம்
“எவ்வளவு பணம் இருந்தால் என்ன உங்களுக்கு பிடித்த வீடு மற்றும் கார் ஆகியவற்றை நீங்கள் வாங்கி வைத்து விட்டீர்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். கடவுள் எனக்கு அளவுக்கு அதிகமான பணம் ஏற்கனவே கொடுத்துவிட்டார். எனக்கு பின்னால் வர இருக்கும் என்னுடைய வழித்தலைமுறைகள் இந்த பணத்தினை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள் என்று நம்புகிறேன்”, என்று கூறியுள்ளார்.
விவேக் ஓபராய் தற்பொழுது ராமாயணம் பாகம் ஒன்று மற்றும் ஸ்பிரிட் ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
