தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கண்காணிக்க துவங்கியிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ் எழுதிய ‘In service of the nation, reflection of bureaucrat’ என்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேற்கு வங்காள ஆளுநர் நாராயணன் மற்றும் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஓய்வு பெற்ற தமிழ்நாடு டிஜிபிக்கள் சங்கர் ஜிவால் மற்றும் டிஜிபி ஏ.கே விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளரிடம் பேசிய வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ், தான் எழுதிய புத்தகம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். குறிப்பாக, தனது 34 வருட ஐஆர்எஸ் அதிகாரியின் அனுபவம் குறித்தும், வருமான வரித்துறை குறித்தும், இந்திய குடியுரிமை பணி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பிரதாப் சிங் யாதவ் இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாக தெரிவித்தார். மேலும் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து பேசினார். அப்போது, “ஒரு மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருந்தால் பணப்பட்டுவாடா நடப்பதை கட்டுப்படுத்த 6 மாதங்களுக்கு முன்பாகவே வருமான வரித்துறை கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கும். அந்த வகையில் தமிழ்நாட்டில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணியை வருமான வரித்துறை தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் 30 வருமான வரித்துறை ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வருமான வரித்துறை கூடுதல் இயக்குநரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். வாரந்தோறும் ஆய்வு குறித்த அறிக்கைகளை தயார் செய்து சமர்ப்பித்து வருகின்றனர். குறிப்பாக, பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் தமிழகத்தில் உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
மத்திய புலனாய்வு அமைப்புகளுடனும், தமிழக போலீசாருடனும் இணைந்து இந்த கண்காணிப்பு பணிகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத் துறை, மத்திய உளவுத் துறை, ஜிஎஸ்டி உளவுத் துறை ஆகிய அமைப்புகளையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.
