ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான ‘இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு’ (Islamic Resistance in Iraq), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுக்குச் சொந்தமான ‘பிரஸ் டிவி’ வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வெகுமதி தொகை, அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை மூலம் திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல் இதுவரை  உறுதிப்படுத்தப்படவில்லை.

2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஈரானின் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக்கின் மக்கள் அணிதிரட்டல் படைகளின் (PMF) துணைத் தளபதி அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதற்காகவே டிரம்ப் மீது பழிவாங்கத் துடிப்பதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது. சுலைமானி மற்றும் அல்-முஹந்திஸ் ஆகியோரின் படுகொலைகளைக் கொண்டாடியதற்காக, ட்ரம்ப் மீது இந்தக் கடும் கோபத்தை அந்த அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.

டிரம்ப்பை கொல்லும் எவருக்கும் அல்லது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் எந்தவொரு அமைப்புக்கும் இந்த வெகுமதி வழங்கப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை உலகெங்கிலும் உள்ள ‘சுதந்திர மக்கள்’ மூலம் தொடரும் என்றும், பிராந்திய ஸ்திரத்தன்மையை அமெரிக்கா சீர்குலைப்பதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தின் தலைநகரான அர்பிலில், அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே எட்டு வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் பறந்ததை அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன. இதில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. ஈராக் பிரதமர் அலி அல்-ஸைதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நடந்த இந்தத் தாக்குதல் முயற்சி, அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்தக் கொலை மிரட்டல் அறிவிப்பு மற்றும் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களின் இந்தத் தீவிரமான அறிவிப்பு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் ராணுவ பதற்றங்கள் குறித்து உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version