அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன், தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து விலகி, தமிழக அரசியலில் பல மாற்றங்களைச் சந்தித்த ஆலந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இன்று சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உயர்ந்தவர் வெங்கட்ராமன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாகப் பிளவுபட்டபோது, அவர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் விசுவாசியாகச் செயல்பட்டார்.

ஓ.பி.எஸ். தரப்பின் அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இணைந்து, சென்னை புறநகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்று கட்சிப் பணிகளை முன்னெடுத்தார். கடந்த 2024ஆம் ஆண்டு, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் மீண்டும் இணைந்தார். இருப்பினும், கட்சியின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத் திசைவழியில் ஏற்பட்ட மாறுபாடுகள் காரணமாக, அவர் திமுகவை நோக்கி நகர்ந்துள்ளார்.

இன்றைய நிகழ்வில் வெங்கட்ராமன் உடன், முன்னாள் அதிமுக மாவட்ட பொருளாளர் தனசேகரன், ஆலந்தூர் கிழக்கு அதிமுக வர்த்தக அணி செயலாளர் இளங்கோ, சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், அதிமுக மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரதாப், ஆலந்தூர் கிழக்கு பகுதி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மொசைக் பாபு, ஆடிட்டர் குமரகுரு உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர். திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு உற்சாகமளித்தனர்.

நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட்ராமன், “கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணன் என்னை அன்புடன் வரவேற்று ஆதரவளித்தார். அவருடன் எப்போதும் உறுதியுடன் இருப்பேன். நிலையான, குழப்பமற்ற தலைமையின் கீழ் பணியாற்ற என் மனம் ஆவலுடன் இருக்கிறது. தமிழக மக்களுக்கு சிறப்பான சேவை செய்யும் வகையில், இன்று முதல் கழகப் பணிகளை சீரும் சிறப்புமாக முன்னெடுப்பேன்” என்றார்.

அதிமுகவில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்த கேள்விக்கு அவர், “அனைவருக்கும் அது தெரியும். ஒரு உறுதியான தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன். தமிழக மக்களின் நலனுக்காகவே இந்த முடிவு” எனத் தெரிவித்தார். இந்த இணைப்பு, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு முக்கிய நிர்வாகிகள் நகரும் புதிய அரசியல் போக்கை வலுப்படுத்தியுள்ளது. திமுக தரப்பு இந்த வரவேற்பை பெரும் வெற்றியாகக் கருதுகிறது. வெங்கட்ராமன் போன்ற அனுபவமிக்க தலைவரின் வருகை, வரும் தேர்தல்களில் திமுகவுக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version