இந்தியா என்றாலே குறைந்த பட்ஜெட்டில் சுற்றிப் பார்க்கக்கூடிய ஒரு நாடு என்ற எண்ணம்தான் உலகப் பயணிகளிடம் பொதுவாக இருக்கும். ஆனால், இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த அமெரிக்கத் தம்பதி ஒருவர், தங்களின் 30 நாள் பயணத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் ($10,605) செலவிட்டதாகக் கூறி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளனர்.
அலெக்ஸ் மற்றும் அமெலியா என்ற அந்தத் தம்பதி, இன்ஸ்டாகிராமில் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து வருபவர்கள். இந்தியாவில் தாங்கள் செலவழித்த தொகையின் முழு விவரத்தையும் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். “இந்தியாவில் நாங்கள் இருந்த 30 நாட்களில் மொத்தம் $10,605 (சுமார் ரூ.10 லட்சம்) செலவாகியுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு மட்டும் சராசரியாக $354 (சுமார் ரூ.33,000) செலவிட்டுள்ளோம். மொத்த கணக்கைப் பார்த்தபோது எங்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, 30 நாட்களில் அவர்கள் மொத்தம் 13 நகரங்களுக்குச் சென்றுள்ளனர். இதற்காக 6 விமானங்கள், 6 பிரைவேட் கார்கள் மற்றும் 2 முறை ரயில்களில் பயணித்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கே பெரும் தொகை செலவாகியுள்ளது. பட்ஜெட் தங்குமிடங்களைத் தவிர்க்க நினைத்த அவர்கள், பிரீமியம் ஹோட்டல்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு ஒரு இரவுக்கு மட்டும் சராசரியாக $127 (சுமார் ரூ.12,000) செலவாகியுள்ளது. தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் வெளிநாட்டினருக்கான பிரீமியம் உணவகங்களில் சாப்பிட்டதும் செலவை அதிகரித்துள்ளது.
இந்தத் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “ஒரு மாதத்தில் இவ்வளவு செலவு செய்துள்ளீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் இந்தியாவில் ராஜாக்களைப் போல வாழ்ந்திருப்பீர்கள்” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவரோ, “இந்தியாவில் லோக்கல் உணவுகளைச் சாப்பிட்டு, பேக்பேக்கராக (Backpacker) சுற்றினால் மிகக் குறைந்த செலவில் முடித்துவிடலாம். ஆனால், கொரோனாவுக்குப் பிறகு பிரீமியம் ஹோட்டல்கள் மற்றும் தரமான உணவகங்களின் விலை இந்தியாவில் பல மடங்கு உயர்ந்துவிட்டது” என்று தம்பதிக்கு ஆதரவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், “நான் இந்தியாவில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தற்கே வெறும் $1200 தான் செலவானது” எனப் பல பட்ஜெட் பயணிகளும் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
