புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் திமுக, காங்கிரஸின் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் அதிகளவில் நடைபெறவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைக்கக் கூடாது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியதால், கூட்டணி முடிவில் இழுபறி நீடித்து வந்தது. கடந்த 19-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று ( 20.03.2026 ) புதுச்சேரி திரும்பினார் முதலமைச்சர் ரங்கசாமி.
தொடர்ந்து மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளுக்கான வேட்புமனுக்களை தயார் நிலையில் வைத்திருந்தார். கதிர்காமம் முருகன் கோயிலுக்கு சென்று வேட்புமனுவை வைத்து சாமி கும்பிட்டு கையெழுத்திட்டவர், தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வேட்புமனுவை கோரிமேடு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திலும், சாரம் நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநர் அலுவலகத்திலும், தாக்கல் செய்தார்.
அந்த வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளப் படி, அவரது பெயரில் அசையும் சொத்து ரூ.21கோடியே 25லட்சமும், அசையா சொத்து ரூ.27கோடியே 78லட்சமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
