சீனாவின் ஹுபே மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹுன்ஷி, ஹுன்ஹங், இஹொ, ஜினிங் உள்ளிட்ட நகரங்களில் பலத்த மழை பெய்ததால் உள்ளூர் ஆறுகள் உடனடியாக வெள்ளப்பெருக்கெடுத்தன. வெள்ள நீர் சாலைகளையும் குடியிருப்புப் பகுதிகளையும் சூழ்ந்து, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கையை முடக்கியுள்ளது.
மழைக்கு உடனடியாகப் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கிய 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 275 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல இடங்களில் வீடுகள், வாகனங்கள் மற்றும் பயிர் நிலங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவம், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளப் பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல், சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கன்சு மாகாணத்தின் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 16 பேர் மண்ணுக்குள் சிக்கி மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால், அருகிலுள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வானிலைத் துறை அதிகாரிகள், அடுத்த சில நாட்களுக்கு இந்தப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் உடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து மத்திய அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
