கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளத்தைச் சேர்ந்த ராஜு, தனது மனைவியான பேராசிரியையுடன் குடும்பத்தினருடன் சில நாட்களுக்கு முன்பு திற்பரப்பு அருவி மற்றும் படகுத்துறைக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது, திற்பரப்பு தடுப்பணையில் படகுச் சவாரி செய்து கொண்டிருந்தபோது, மற்றொரு படகில் வந்த மூன்று இளைஞர்கள், பேராசிரியை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தண்ணீர் தெளித்து அச்சுறுத்தியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேராசிரியை படகுத்துறை குத்தகைதாரர்களிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியை மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பவத்தில் தொடர்புடைய மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த பாஜக முன்னாள் மாவட்ட OBC அணி துணைத் தலைவர் பிரபு (36), டார்வின் மற்றும் பிரைட் ராபின் ஆகியோர் மீது கடையால்மூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், படகுச் சவாரியின் போது பேராசிரியையிடம் அத்துமீறியதாக கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
