கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று பல்வேறு முக்கிய பிரச்சினைகளை மையப்படுத்தி பெரும் குழப்பத்துடன் நடைபெற்றது. செம்மொழி பூங்கா திட்டத்தில் ரூ.40 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் எழுப்பிய குற்றச்சாட்டு திமுக உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்துக்கும், தள்ளு முள்ளுக்கும் வழிவகுத்தது. மேலும், பல்வேறு கட்சி கவுன்சிலர்களின் போராட்டங்கள் கூட்ட அரங்கை பரபரப்பாக்கின.

மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மண்டல அலுவலகங்களில் நடைபெறும் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம்கள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததற்கு மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் திமுக கவுன்சிலர்களும் ஆணையரிடம் விளக்கம் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்டோர், செம்மொழி பூங்கா அமைக்கும் பணியில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, மேயர் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும், சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

அதே நேரத்தில், அதிமுக கவுன்சிலர்கள் மூவர் குடிநீர் பற்றாக்குறையை வலியுறுத்தி காலி குடங்களுடன் அரங்கில் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். பல்வேறு தரப்பினரும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாமன்ற அரங்கு கடும் கூச்சல், குழப்பத்துக்கு உள்ளானது.

கூட்டத்தின் போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும் திமுக பெண் கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தனது சேலையைப் பிடித்து இழுத்ததாக காயத்ரி பின்னர் குற்றம் சாட்டினார். மேடையில் ஏறி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகரித்தது. இதனால் கூட்டத்தை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பதாக மேயர் அறிவித்தார். மீண்டும் கூட்டம் தொடங்கியபோது, அவை ஒழுங்கை பாதித்ததாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமமூர்த்தி, பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகிய ஐந்து பேருக்கு இரு மாதங்கள் இடைநீக்கம் செய்வதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், பின்னர் காயத்ரி மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாற்றி அறிவிக்கப்பட்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி, முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்காக தாக்கப்பட்டதாகக் கூறினார். மேலும் தமிழக முதல்வர் விஜய் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல் காங்கிரஸ் கவுன்சிலர் அழகு ஜெயபாலன், முறைகேடு இருந்தால் முழு விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version