நீங்கள், எங்களது சமூக வலைதள பதிவுகளை நீக்கலாம். ஆனால், எங்களை துடைத்தெறிய முடியாது என்று அபிஜித் தீப்கே பேசினார்.
நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. சமூக வலைதளங்கள் மூலம் உருவாகி பின்னர் அரசியல் இயக்கமாக வளர்ச்சி பெற்றுள்ள இக்கட்சியின் முதல் பெரிய அளவிலான போராட்டம் என்பதால் நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது.
போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே பேசுகையில், கல்வி அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார். ஆனால், தங்களது கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளப் பதிவுகள் நீக்கப்படுவது, சில கணக்குகள் முடக்கப்படுவது, ஹேக்கிங் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போன்ற செயல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், “எங்களது பதிவுகளை நீக்க முடியும்; ஆனால் மாணவர்களின் நலனுக்காக எழுப்பப்படும் இந்தக் குரலை அடக்க முடியாது. கல்வி முறைகேடுகளுக்கு எதிரான இந்தப் போராட்டம் நீண்டகாலம் தொடரும். மக்களின் ஆதரவுடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்,” என்று அவர் கூறினார்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லடாக் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை ஒரு தொடக்கநிலை நடவடிக்கை மட்டுமே என குறிப்பிட்டார். நாட்டின் கல்வி அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் போன்ற சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள் அல்ல; அவை கல்வி அமைப்பில் நிலவும் ஆழமான குறைபாடுகளின் வெளிப்பாடுகள் என சோனம் வாங்சுக் சுட்டிக்காட்டினார். கல்வி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்கும் நடைமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த போராட்டம், தேசிய அளவிலான தேர்வுகளின் நம்பகத்தன்மை மற்றும் கல்வி நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
