அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விக்கு பிறகு கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு, சமீபத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்தது.
முன்னதாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் சிலரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டது. இந்தநிலையில், ஒன்றிணைந்த பிறகும் பறிக்கப்பட்ட முக்கிய கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படாததால், வேலுமணி தரப்பினர் கடும் குழப்பத்திலும் அதிருப்தியிலும் இருந்து வந்தனர். இதன் காரணமாகவே, மூத்த தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த சில நாட்களாக இபிஎஸ்-ஐ நேரில் சந்திப்பதைத் தவிர்த்து, தங்களது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர்.
ஜூன் 4-ஆம் தேதிக்குள் (நேற்று) அதிருப்தியில் உள்ள தலைவர்களுக்கு கட்சியில் மீண்டும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் அல்லது அவர்கள் இடம்பெறும் வகையில் புதிய உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என இபிஎஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட கெடு முடிந்தும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் இபிஎஸ் தலைமை மீது அதிருப்தியடைந்த தலைவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, சென்னை எம்.ஆர்.சி நகரில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர்களது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒன்றுகூடி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், அதிமுகவின் இந்த முக்கியத் தலைவர்கள் இபிஎஸ்-க்கு எதிராக மீண்டும் தனி அணியாகத் திரள வாய்ப்புள்ளதால், கட்சியின் தலைமை இந்த சலசலப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
