புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு தற்போது மின்சாரப் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அம்பத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் கூட்டம் போராட்டக் களமாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்பத்தூர் தெற்கு தொகுதி தி.மு.க. சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். கூட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இருள் சூழ்ந்த மேடையில் திமுகவினர் டார்ச் லைட் உதவியுடன் ஒன்றுகூடினர். உடனடியாக “தவெக அரசு ஒழிக”, “மின்வெட்டுக்கு காரணமானவர்கள் பதவி விலக வேண்டும்” உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பினர். சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

புறநகர் சென்னையில் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேர மின்வெட்டு 3 முதல் 4 மணி நேரம் வரை நீடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். “கோடை வெயிலில் பகல் நேரத்தில் சிரமம்; இரவில் தூங்கவும் முடியவில்லை” என பொதுமக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். தவெக அரசின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மின்வாரிய அதிகாரிகள் இதற்கு இரு முக்கிய காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஒன்று, தேர்தல் காரணமாக கோடைகால முன்னேற்பாட்டுப் பணிகள் – அதாவது மின் கம்பங்கள், இணைப்புகள் மற்றும் உபகரணங்களை பழுது பார்க்கும் பணிகள் – போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாவது, மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை.

திமுக ஆட்சியிலும் மின்வெட்டு இருந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினாலும், தற்போதைய அளவுக்கு தீவிரமான பிரச்சனையாக அது இல்லை என்று மக்கள் ஒப்பிடுகின்றனர். மின்சார உற்பத்தி போதுமான அளவில் உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தாலும், “உற்பத்தி இருந்தும் மக்களுக்கு மின்சாரம் ஏன் கிடைக்கவில்லை?” என்பது மக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. தவெக அரசு இந்தப் பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மின்வெட்டு தொடர்ந்தால் பொதுமக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version