அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கும் வகையில் விரிவான திட்டங்கள் தயாராக உள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் அரசுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ஈரானின் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்கலாம் என்ற தகவல்களை “பைத்தியக்காரத்தனமான செயல்” என்று விமர்சித்தார்.

மேலும், “அமெரிக்காவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய கட்டமைப்புகளை தாக்குவதற்கான விரிவான பதிலடி திட்டங்கள் ஏற்கனவே தயாராக உள்ளன. அவற்றை நிறைவேற்றும் திறனும், உறுதியும் ஈரான் ஆயுதப் படைகளிடம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கடல் வழித்தடத்தில் மேலும் நான்கு எண்ணெய் கப்பல்கள் பயணத்தை கைவிட்டு திரும்பிச் சென்றதாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள பகுதிகளை நோக்கிச் சென்றதாகக் கூறப்படும் ஈரானிய ட்ரோன்களை தங்களது வான்வெளியில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ட்ரோன் சிதறல்கள் விழுந்ததால் சில பொருட்சேதங்கள் ஏற்பட்டாலும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version