தமிழகத்தில் நீண்டகாலமாக வலுவாக இருந்த மத்திய அரசுக்கு எதிரான குரல் சமீபகாலமாக கணிசமாகக் குறைந்துள்ளது. திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) ஒன்றையொன்று கடுமையாகத் தாக்கி வரும் நிலையில், இந்தப் பிளவைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு தனது கொள்கைகளைத் தடையின்றி நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புதிய கட்சியான தவெகவின் தலைவர் விஜய், பொதுக்கூட்டங்களில் திமுக அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவும் அதற்கு உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இந்த வார்த்தைப் போரால் மாநில அரசியல் கவனம் முழுவதும் உள்மோதலில் சிக்கியுள்ளது. இதனால் மத்திய அரசின் திட்டங்கள் எளிதாக ஊடுருவும் சூழல் உருவாகியுள்ளது.

உயர்கல்வித் துறையில் துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யுஜிசி உறுப்பினரைச் சேர்க்க ஆளுநரின் அழுத்தத்துக்கு தவெக அரசு இணங்கியதாக விமர்சனம் எழுந்துள்ளது. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என முழங்கிய தமிழகம், இப்போது மத்திய அரசின் பிடியில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான ஒருமித்த எதிர்ப்பு, கட்சிகளுக்கிடையிலான குற்றச்சாட்டுகளால் நீர்த்துப் போய்விட்டது. புதிய கல்விக் கொள்கையின் (NEP) சில அம்சங்கள் மறைமுகமாக அறிமுகப்படுத்தப்படுவதையும் தவெக அரசு கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

‘பிஎம் ஸ்ரீ’ பள்ளிகள் திட்டம் உள்ளிட்ட மத்திய திட்டங்களுக்கு தமிழகம் இணங்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. தேசிய கீதத்தை இருமுறை பாடும் நடைமுறையும் எதிர்ப்பின்றி ஏற்கப்பட்டது. மாநில உரிமைகள், நிதிப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களில் குரல் மந்தமாகியுள்ளது. திமுக-தவெக மோதல் காரணமாக மத்திய அரசுக்கு எதிரான வலுவான அரசியல் எதிர்ப்பு பலவீனமடைந்துள்ளது. இது நீண்டகாலத்தில் தமிழகத்தின் அரசியல்-சமூக அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கீரி-பாம்பு சண்டையில் பருந்துக்கு லாபம்: திமுகவும் தவெகவும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டிருக்கும் போது, மத்திய அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறது என்பது கவனிக்கத்தக்கது. வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய தவெக அரசு, அரசியல் எதிரிகளை வீழ்த்துவதிலேயே அதிக நேரம் செலவழிப்பதாக விமர்சனம் உள்ளது.மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவெக முன்னெடுப்பு எடுக்க வேண்டும்.

இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து தாக்கும் அணுகுமுறை அண்டை மாநிலங்களுடனான உறவையும் பாதிக்கும்.சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் புழக்கம் போன்ற மக்கள் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான அழுத்தம் தர வேண்டும். அரசியல் தாக்குதல்களுக்கு அப்பால், மாநில உரிமைகளைப் பாதுகாத்து, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியது அனைத்துக் கட்சிகளின் கடமை. உள்மோதல்களால் தமிழகத்தின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version