அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வி என்பதுதான் தவெக அரசின் முக்கிய நோக்கம்; தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் சிஎம்டிஏ குடியிருப்பு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முப்பெரும் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். அப்போது 2026-2027ஆம் கல்வியாண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியதோடு, 21 ஸ்மார்ட் போர்டுகளையும் (Smart Board) தொடங்கி வைத்தார். 10ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மற்றும் 1330 திருக்குறளை ஒப்பித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையையும் பரிசுகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திரமோகன், இயக்குநர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியை உலக மொழி என்பார்கள், வட இந்தியர்கள் தங்கள் மொழியைத் தேசிய மொழி என்பார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் நம் மொழியைத் ‘தாய் மொழி’ என்கிறோம். தன் பிள்ளை ஜெயிக்க வேண்டும் என்று பெற்றோர் நினைப்பார்கள்; ஆனால், தன் வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆசிரியர்கள் மட்டும்தான்.
முன்பெல்லாம் ஆசிரியர்களிடம் நாங்கள் கோரிக்கை வைப்போம். ஆனால் இப்போது மாணவர்களாகிய உங்களிடம் நான் கோரிக்கை வைக்கிறேன்; தயவுசெய்து ஆசிரியர்களிடம் கோபப்படாமல் இருங்கள். அவர்களை உங்களது நல்ல நண்பர்களாக ஏற்றுப் பழகுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், மாணவர்களுக்குக் கல்வியை விட முதலில் ஊட்டச்சத்தும், ஆரோக்கியமுமே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகள் தங்களின் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கடந்த கால ஆட்சியில் நடந்த முறைகேடுகளைச் சரிகட்ட கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இது குறித்துப் புகார் அளிக்கலாம்.
பிஎம் ஸ்ரீ திட்டம் மற்றும் கல்வி நிதி குறித்துப் பேசிய அவர், “இருமொழிக் கொள்கையில் இருந்து தவெக அரசு எப்போதும் மாறாது. இதனைப் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு நமது நிதியை நிறுத்தி வைத்தால், டெல்லிக்குச் சென்று பேசி உரிய நிதியைப் பெற்றுத் தருவோம்” என்றார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொய்வின்றித் தொடரும். இத்திட்டங்களிலோ அல்லது உபகரணங்கள் வாங்குவதிலோ ஏதேனும் ஊழல் நடந்தால் கடும் நடவடிக்கை பாயும்.
கடந்த ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் முழுமையாகத் திரும்பப் பெறப்படும்.
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய வரைமுறைகளின்படி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மடிக்கணினிகள் காணாமல் போனதாக வந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
“மாணவர்களுக்காக அரசு செய்யும் செலவுகளை நாங்கள் செலவாகப் பார்க்கவில்லை; நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடாகவே பார்க்கிறோம்” என்று அமைச்சர் ராஜ்மோகன் தனது பேட்டியில் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
