நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் பெயரில் முறைகேடு நடப்பதாகவும், விழிப்புடன் இருக்கும்படியும் அகரம் பவுண்டேஷன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக அகரவும் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;-

அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) சென்னை தியாகராய நகரில் மட்டுமே தனது அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் எங்களுக்குக் கிளை அலுவலகங்கள் இல்லை என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

‘அகரம் விதை’ திட்டத்திற்கான மாணவர் தேர்வு, சமூகப் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பணமாகவோ, பொருளாகவோ பெறப்படுவதில்லை.

சமீபகாலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தனிநபர்களும் அமைப்புகளும் “அகரம்” என்ற பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி. தவறான தகவல்களைப் பரப்புவதோடு, மாணவர்களையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் ஏமாற்ற முயற்சிப்பது கவனத்திற்கு வந்துள்ளது.

எனவே, ‘அகரம்’ சார்பாக உங்களை அணுகுவதாகக் கூறும் நபர்கள் அல்லது அமைப்புகளிடம், எங்களின் அதிகாரப்பூர்வத் தளங்களில் உறுதிப்படுத்தாமல் எக்காரணம் கொண்டும் அசல் கல்விச் சான்றிதழ்கள், பணம், தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version