விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. பிரபல இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜூ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்பாக வெளியாகும் கடைசி திரைப்படம் என்ற தகவல் வெளியானதையடுத்து, ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான காரணங்களால் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். படத்தின் வெளியீடு தாமதமான நிலையில், இணையத்தில் படத்தின் முழு பதிப்பு சட்டவிரோதமாக வெளியானதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக படக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு, இணையத்தில் படத்தை வெளியிட்டவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டுக்கான முக்கியமான தடைகள் நீங்கிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகம் ஏற்பட்டது.
தணிக்கை சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’, அரசியல் பின்னணி மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விஜய்யை மீண்டும் வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
