சர்வதேச ஃபார்முலா 1 (F1) பந்தயங்களை நிர்வகிக்கும் சர்வதேச வாகன கூட்டமைப்பு (FIA), ஃபார்முலா ஒன் மேனேஜ்மென்ட் (FOM), பந்தய அணிகள் மற்றும் இன்ஜின் தயாரிப்பாளர்கள் இணைந்து, 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளுக்கான புதிய இன்ஜின் விதிமுறை மாற்றங்களுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

தற்போதுள்ள விதிகளின்படி, காரின் எரிபொருள் இன்ஜின் மற்றும் மின்சார பேட்டரி திறன் ஆகியவற்றின் ஆற்றல் பகிர்வு 53/47 என்ற விகிதத்தில் இருந்தது. இது பந்தயங்களின் வேகத்தைக் குறைப்பதாக மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டனர். மேலும், ஜப்பானிய கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் ஓலி பியர்மன் பேட்டரி கோளாறு காரணமாக 50G அளவிலான பயங்கர விபத்தைச் சந்தித்ததும் இந்த மாற்றத்திற்கான முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தநிலையில், வீரர்களின் கோரிக்கையை ஏற்று, காரின் வேகத்தை அதிகரிக்கவும், தகுதிச் சுற்றுப் போட்டிகளை இன்னும் விறுவிறுப்பாக்கவும் இன்ஜின் மற்றும் பேட்டரி ஆற்றல் பகிர்வில்  இரண்டு கட்டங்களாக மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

அதன்படி, வருகிற 2027-ஆம் ஆண்டு முதல் காரின் இன்ஜின் திறன் 420 kW ஆக அதிகரிக்கப்படவுள்ளது (இது 5 விழுக்காடு எரிபொருள் ஓட்ட அதிகரிப்புக்கு வழிவகுக்கும்). அதே நேரத்தில், அதன் மின்சார பேட்டரி திறன் 300 kW ஆகக் குறைக்கப்பட்டு, ஆற்றல் பகிர்வு விகிதமானது 58 / 42 என்ற நிலைக்கு மாற்றியமைக்கப்படும். இதனைத் தொடர்ந்து, 2028-ஆம் ஆண்டில் இன்ஜின் திறன் மேலும் உயர்த்தப்பட்டு 450 kW ஆக அதிகரிக்கப்படும் (இது 13 விழுக்காடு எரிபொருள் ஓட்ட அதிகரிப்பைக் குறிக்கும்). இந்த ஆண்டிலும் பேட்டரி திறன் 300 kW என்ற அளவிலேயே நீடிக்கும் என்பதால், இறுதி ஆற்றல் பகிர்வு விகிதமானது 60 / 40 என்ற புதிய விகிதத்தை எட்டும்.

இந்தத் தொடர் மாற்றங்கள் பந்தயக் கார்களின் ஒட்டுமொத்த வேகத்தை நிலைநிறுத்தவும், தகுதிச் சுற்றுப் போட்டிகளை மேலும் விறுவிறுப்பாக மாற்றவும் பெரிதும் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் குறித்து FIA தலைவர் முகமது பென் சுலாயம் கூறுகையில், “ஃபார்முலா 1 பந்தயம் எப்போதும் புதிய சவால்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இந்த புதிய திருத்தங்கள் பந்தயங்களின் விறுவிறுப்பை அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அணிகளுக்கும், இன்ஜின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றிகள்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விதிமுறைகளுக்கான இறுதி மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெற, வரும் ஜூன் 23 அன்று மக்காவ் நகரில் நடைபெறவுள்ள ‘உலக மோட்டார் ஸ்போர்ட்ஸ் கவுன்சில்’ (WMSC) கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version