புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு கைத்துப்பாக்கி உடன் வந்தவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி உள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, முதல் முறையாக விஜய் பொதுவெளியில் பங்கேற்கும் நிகழ்ச்சி புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறை, தவெக கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தவெக வழங்கிய கியூ ஆர் கோட் அடங்கிய பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள காவல்துறை, தவெக கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் புதுச்சேரியில் இருப்பவர்களுக்காக மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அண்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர். தொண்டர்களை கூட்ட அரங்கில் அனுமதித்த போது மெட்டல் டிடெக்டரால் மூலம் அவர் பிடிப்படடு உள்ளார். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் எதற்காக வந்தார் என அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு டோக்கனுக்கு இருவர் வரலாலம் என்ற தவறான தகவல் பரவியதால் குழப்பமான சூழல் ஏற்பட்டது. QR கோட் உடனான டோக்கன் கொடுக்கும் போது ஒரு டோக்கனுக்கு இருவர் வரலாம் என தவெக நிர்வாகிகள் சிலர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் காவல்துறையினர் QR கோட் உடனான டோக்கனுக்கு ஒருவரை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.
மேலும் பாண்டி மெரினா, மைதானத்திற்கு பின்புறம், பழைய துறைமுகப் பகுதி என 3 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிவறை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
