மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான தமிழக அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

காவிரி நீர் பங்கீடு பிரச்னையில் முக்கியத்துவம் வாய்ந்த மேகதாது அணை திட்டத்துக்கு தொடர்புடைய திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த நவம்பர் 13, 2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு (நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி) இந்த மனுவை தங்கள் அறையிலேயே (Chamber) பரிசீலித்து, மறுஆய்வுக்கு போதுமான அடிப்படை இல்லை என முடிவு செய்தது. இதன்மூலம் கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்கும் பாதை தொடரும் என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக, 2025 நவம்பர் 13-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறியது.

தமிழ்நாடு தரப்பில் எழுப்பப்படும் அச்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்பக் கட்டத்திலானவை என்றும், DPR முழுமையாக தயாரிக்கப்பட்டு மத்திய நீர் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்படும்போது, தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ஏற்க முடியாது எனக் கூறிய தமிழ்நாடு அரசு, கடந்த டிசம்பர் மாதம் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.

2013-ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும், 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய தமிழ்நாடு, புதிய உத்தரவு முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது என வாதிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் விரிவான வாதங்கள் தேவைப்படுவதால், சேம்பரில் அல்லாமல் திறந்த நீதிமன்ற அறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியது.

ஆனால், ஏப்ரல் 15, 2026 அன்று பட்டியலிடப்பட்ட மனுவை நீதிபதிகள் அறையிலேயே பரிசீலித்து, “நவம்பர் 13, 2025 உத்தரவை மறுஆய்வு செய்ய போதுமான முகாந்திரம் இல்லை” எனத் தெரிவித்து இரு மனுக்களையும் (விசாரணை முறை மாற்றம் மற்றும் மறுஆய்வு) நிராகரித்தனர். இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகதாது அணை திட்டம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் பங்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version