பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 12 பேர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

டேங்க் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது இன்று (ஜூலை 24) தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நபர், பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கியிருந்த சோதனைச் சாவடியை நோக்கி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து வந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் 12 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 3 பேர் என மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், சில பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனப்படும் உள்ளூர் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version