உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்மூஸ் நீரிணையைத் திறக்க வேண்டுமானால், அமெரிக்கா தனது “நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த நீரிணை மற்றும் அதன் போக்குவரத்து நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் தலைகீழாக மாற்றக்கூடிய புதிய நிபந்தனைகளையும் ஈரான் விதித்துள்ளது.

ஈரானின் மிக உயர்மட்ட அமைப்பான ‘உயர்ந்த தேசிய பாதுகாப்புப் பேரவை’ (வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக் கூடாது. ஈரானுக்கும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளுக்கும் எதிரான போரை அமெரிக்கா நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும் மற்றும் இப்பகுதியிலிருந்து தனது ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். போர் சேதங்களுக்கான இழப்பீட்டை முழுமையாக வழங்க வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை “நிபந்தனையற்ற முறையில்” விடுவிக்க வேண்டும்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், இறுதி ஒப்பந்தத்தை எட்ட நிர்ணயிக்கப்பட்ட 60 நாள் காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹார்மூஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் ஒரு தனி ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியில் தாங்கள் நெருங்கிவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய ஈரானிய வெளியுறவை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வழிசெலுத்துதல் குறித்தும், குறிப்பாக ஒரு போக்குவரத்து வழித்தடத்தை நிர்ணயிப்பது குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், நீரிணை திறக்கப்படுவது மேற்கண்ட பிற நிபந்தனைகளைப் பொறுத்தே அமையும் என்றார்.

மறுபுறம், பேச்சுவார்த்தைகள் “நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான சூழலில்” நடைபெற்று வருவதாக ஓமன் நாடு தெரிவித்துள்ளதுடன், நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் கண்டித்துள்ளது.

இதற்கிடையில், அபுதாபியைச் சேர்ந்த அரசுக்குச் சொந்தமான ADNOC எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்மூஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரான்தான் இந்தக் கப்பல் மீதான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அமீரக வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதிலிருந்து, நீரிணையைக் கடக்கும்போது ADNOC நிறுவனத்தின் டஜன் கணக்கான கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு பணியாளர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஓமனின் காசாப் நகருக்குக் கிழக்கே சென்று கொண்டிருந்த மற்றொரு கப்பல் மீதும் அடையாளம் தெரியாத ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இங்கிலாந்து கடல்சார் வர்த்தகப் போக்குவரத்து மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version