டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தின் பைலட் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், விமானத்தில் இருந்த 175-க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணிக்கு ஜெய்ப்பூர் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் (6E 6131), இரவு 9.09 மணிக்குத்தான் புறப்பட்டது. இந்த விமானத்தில் ராஷ்டிரிய லோக்தந்திர கட்சி (RLP) நிறுவனரும், நாகூ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹனுமான் பெனிவால் உட்பட 175-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். வழக்கமாக உள்நாட்டு விமானங்களை இயக்கும் விமானக் குழுவினர், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகப் பணிக்கு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பலத்த மழை மற்றும் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பைலட் வர தாமதமாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
விமானத்தில் நீண்ட நேரம் காத்திருந்தது குறித்துப் பேசிய எம்பி ஹனுமான் பெனிவால், “டெல்லியின் வானிலை நிலவரம் அனைவருக்குமே தெரியும். போக்குவரத்து பிரச்சினைகளை முன்கூட்டியே யூகித்து நான் மாலை 6.05 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டேன். ஆனால் பைலட் ஏன் முன்கூட்டியே கிளம்பவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
விமானத்தில் அமர்ந்த பிறகும் விமானம் கிளம்பாததால், தான் விமானப் பணியாளர்களிடம் விசாரித்த பிறகே பைலட் வரவில்லை என்ற விவரம் தெரியவந்ததாக அவர் கூறினார். “மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமாவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பைலட்டின் இதுபோன்ற கவனக்குறைவை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், வேறு ஒரு இண்டிகோ விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், அந்த விமானத்தின் பைலட் அவசரமாக அழைத்துவரப்பட்டு தங்களுடைய விமானத்தை இயக்கினார் என்று அவர் கூறினார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு பயணி ஏதேனும் காரணத்திற்காக ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், அவருக்காக விமானம் ஒரு மணி நேரம் காத்திருக்குமா?” என்று கேள்வி எழுப்பியதோடு, சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் இண்டிகோ நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இண்டிகோ நிறுவனத்தின் விளக்கம்: இந்தச் சம்பவம் குறித்துப் பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம், எதிர்பாராத சூழ்நிலைகள் சில சமயங்களில் விமானச் செயல்பாடுகளைப் பாதிப்பதாகத் தெரிவித்தது. “பெருமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், விமானம் தாமதமானது. பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவிப்புகள் வழங்கி நிலைமை விளக்கப்பட்டது” என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

