ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய கடல் எல்லைப் பகுதியில் இருந்த இக்கப்பல், மார்சு தீவுகள் கொடியைக் கொண்ட MV OMORFI என அடையாளம் காணப்பட்டுள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இக்கப்பலில், 3 இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 பணியாளர்கள் இருந்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமியின் பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும், அவரது குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்த மற்ற இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களையும், சர்வதேச கடற்பயண பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் செயல்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாக வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்சவால் தெரிவித்தார்.

இதற்கு முன்பு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட MV GOLDEN LEO என்ற கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பதும், இத்தகைய உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா தரப்பில் ரஷ்ய தூதரக அதிகாரியிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version