டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்துத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 2வது முறையாக  வீடியோ வெளியிட்டு இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தேர்வுத் தாள் கசிவு வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைவுபடுத்துவதாக உறுதியளித்திருந்த நிலையில், “மதிப்புமிக்க ஆலோசனைகளை” வழங்கிய அனைத்து “இளைஞர் நண்பர்களுக்கும்” அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவில் பிரதமர் மோடி, “நன்றி நண்பர்களே!  நான் வெளியிட்ட காணொளிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி. நாம் தொடர்ந்து நேர்மறையான வழியில் இணைந்திருப்போம். அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் வியாழக்கிழமை வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தாள் கசிவு வழக்குகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வரைவு மசோதாவை மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுகள் சட்டத்திற்குப் பதிலாக இந்த புதிய வரைவு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடுமையான சட்ட வரைவுகள் கொண்டுவரப்பட்ட போதிலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் அவருக்கு ஆதரவாக இருப்பதால், அவர் பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பிடிஐ செய்தி நிறுவனம் வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவப் படிப்புக்கான நீட்-தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் (NTA) தேவையான சீர்திருத்தங்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் மத்திய அரசு தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் அவை சரிசெய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version