தவெக ஆட்சியில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அரசு மருத்துவமனைகளில் சேவையை மேம்படுத்தும் வகையில், பணி நேரத்தில் அனைத்து மருத்துவர்களும் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் குடும்ப நலத் துறை இணை இயக்குநர்களுக்கு தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களின் வருகை மற்றும் பணி நேர ஒழுக்கத்தை கண்காணிக்கும் பொருட்டு துறை சார்பில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு உறுதியாக உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். “மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகளைத் தடுக்கும் வகையிலும் நீட் தேர்வு இருக்கக்கூடாது” என்பது தவெக அரசின் தெளிவான கொள்கை என்றார். இதனால் ஏற்படும் சமூக அநீதியை சுட்டிக்காட்டிய அவர், விரைவில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

மருத்துவமனை வளாகங்களில் இயங்கும் உணவகங்கள் குறித்தும் அமைச்சர் விரிவாகப் பேசினார். ஒப்பந்தக் காலம் முடிந்த பின்னரும் சில உணவகங்கள் காலி செய்ய மறுப்பதாகவும், முந்தைய ஆட்சியில் ஆளுங்கட்சியுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே இந்த உணவகங்களை நடத்த அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையை மாற்றி, இனி வெளிப்படையான டெண்டர் முறையில் உணவகங்கள் ஒதுக்கப்படும். பொதுமக்கள் நியாயமான விலையில் தரமான உணவு பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

காவல்துறை நடவடிக்கை குறித்தும் அமைச்சர் முக்கிய தகவலைப் பகிர்ந்தார். “கடந்த காலங்களில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்புடையவர்கள் குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களை விட்டுவிடுமாறு போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில், குற்றம் செய்தவர் யார் என்பதைப் பொருட்படுத்தாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்றார். இதனால் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய எவரும் சட்டத்தின் முன் சம உரிமை பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தாலுக்கா மருத்துவமனைகளில் மின்விசிறிகள் சரியாக இயங்கவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முழுமையான வசதிகள் இருப்பதை உறுதி செய்ய ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” என்றார்.

இந்த அறிவிப்புகள் மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்தவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கவும் தவெக அரசு எடுக்கும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version