இந்திய அதிகாரிகளின் தரச்சான்றிதழ் பெறப்பட்டதை அடுத்து, எல்லையில் நிறுத்தப்பட்ட மாம்பழ லாரிகள் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்று நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளதாக வெளியான தகவல்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன. இதையடுத்து நேபாள வேளாண் மற்றும் கால்நடை மேம்பாட்டு அமைச்சகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், இந்தியாவில் இருந்து வரும் மாம்பழங்கள் மீது முழுமையான தடை எதுவும் அமலில் இல்லை என்றும், நடைமுறையில் உள்ள தரநிலைகள் மற்றும் இறக்குமதி விதிமுறைகளின் அடிப்படையிலேயே அவை அனுமதிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தைத் தேவையை கருத்தில் கொண்டு, தேவையான ஆவணங்கள் மற்றும் தரச்சான்றிதழ்களுடன் வரும் பழங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், எல்லைப் பகுதிகளில் தரப்பரிசோதனை மேற்கொள்ள தேவையான வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றும் கூறி இறக்குமதி தடை விதிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதன் தாக்கமாக இந்தியாவிலிருந்து மாம்பழங்களை ஏற்றிச் சென்ற பல லாரிகள் எல்லைப் பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்தச் சூழலில், இந்திய அதிகாரிகளால் வழங்கப்பட்ட தரச்சான்றிதழ்கள் மற்றும் சுகாதாரச் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர், எல்லையில் காத்திருந்த மாம்பழ சரக்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த நெரிசலும் படிப்படியாக குறைந்துள்ளது.
நேபாளத்தின் பழச்சந்தையில் இந்திய மாம்பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கோடை காலங்களில் உள்நாட்டு உற்பத்தி மட்டுமே சந்தைத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுவதால், இந்தியாவிலிருந்து கணிசமான அளவில் மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இறக்குமதி தடை நீடித்தால் சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் உயரக்கூடும் என வியாபாரிகள் எச்சரித்திருந்தனர். இதையடுத்து வெளியிடப்பட்ட நேபாள அரசின் விளக்கம், வணிகத் துறையினருக்கும் நுகர்வோருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
