ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வரும் தவெக தலைவர் நடிகர் விஜய், அடுத்ததாக வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி முடிவுற்ற நிலையில் அதன் முடிவுகள் வருகிற 4-ம் தேதி வெளியாகிறது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தகிக்கும் அனலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு வேட்டையாடிய அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தேர்தல் முடிவுற்றதும் தங்களை குளுமைப்படுத்திக் கொள்ள மலைவாசஸ்தலங்களுக்கு சென்று வருகிறார்கள்
ஆனால் தவெக தலைவரும் நடிகருமான விஜயோ தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்னும் வேட்கையில், கடவுளிடம் சரணாகதி அடைந்து ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
கடந்த 28-ம் தேதி திருச்செந்தூர் சென்ற விஜய், அதிகாலையில் கோவில் நடை திறந்தபிறகு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் ஏப்ரல் 29ஆம்தேதி மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தனி விமானத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்ததும் மாலையே சென்னை திரும்பிய விஜய், இன்று தவெக வேட்பாளர்களை பனையூருக்கு வரவழைத்து பேசினார்.
இந்த நிலையில் தனது ஆன்மிகப் பயணத்தின் அடுத்தக்கட்டமாக, வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி மே 2ஆம் தேதி வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் செல்லும் விஜய், அங்கு மாதா சுரூபம் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். தொடர்ந்து, நாகூர் தர்காவுக்கு சென்று வழிபாடு மேற்கொள்கிறார்.
முருகர், சாய்பாபா, வேளாங்கண்ணி, நாகூர் தர்கா என சர்வமத தலங்களுக்கும் விஜய் மேற்கொண்டிருக்கும் இந்த ஆன்மிகப் பயணம் தேர்தல் முடிவுகள் தொடர்பான அவரது கனவை நனவாக்குமா என்பது 4ஆம் தேதி தெரிந்துவிடும்
