நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறிய கருப்பு நிற பூச்சிகளின் திடீர் படையெடுப்பு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. ஆயிரக்கணக்கான பூச்சிகள் மாலை நேரத்தில் விளக்குகளைச் சுற்றி வட்டமடித்து, வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் மொய்க்கத் தொடங்கியதால் பகுதி மக்கள் தங்கள் வீடுகளை சிறை போல் மூடி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தப் பூச்சிகள் கடிக்காதவை, உடம்பில் உட்கார்ந்தாலும் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுத்தாதவை என்றாலும், உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றில் விழுந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. “கதவு, ஜன்னல்களைத் திறந்தாலும் பூச்சிகள் உள்ளே புகுந்துவிடுகின்றன. சமைப்பதும், சாப்பிடுவதும் கடினமாகிவிட்டது” என்கின்றனர் சேலாஸ் பகுதி வாசிகள்.

பகல் நேரங்களில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், மாலை விளக்குகள் எரியத் தொடங்கியதும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகுகிறது. வியாபாரிகளும் இதனால் பெரும் இழப்பை சந்தித்தனர். கடைகளுக்குள் பூச்சிகள் மொய்க்கவே, பலர் கடையை அடைத்து வீட்டுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதைத் தொடர்ந்து சேலாஸ் வியாபாரிகள் போராட்டத்துக்கு முன்வந்ததால், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

குன்னூர் நகராட்சி சுகாதாரத் துறை கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் மூலம் புகை தெளித்ததுடன், பிளீச்சிங் பவுடர் தெளித்து பூச்சிகளின் பரவலை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளது. இந்தப் பூச்சிகள் ஒரு நாள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. மாலையில் வந்து விளக்குகளில் அமர்ந்தவை காலையில் இறந்து வீட்டு வாசல்களில் குவிகின்றன. இறந்த பூச்சிகளில் இருந்து வாடை வீசுவதால், மக்கள் தினமும் டெட்டால் தெளித்து சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே பிரச்சனை சேலாஸிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிளிஞ்சடா பகுதியிலும் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

ஓடு வீடுகளில் விளக்குகள் இருக்கும் இடங்களில் இந்தப் பூச்சிகள் அதிகம் குவிவதாகக் கூறப்படுகிறது. மருத்துவர்கள் இதுவரை இந்தப் பூச்சிகளால் கடி அல்லது நச்சுப் பாதிப்பு ஏற்பட்டு யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை என உறுதிப்படுத்தினர். வனத்துறைக்கும் இது தொடர்பான எந்தப் புகாரும் வரவில்லை. தற்போது பூச்சி தொல்லை கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், மக்கள் இன்னும் உணவுப் பொருட்கள் மற்றும் ஜன்னல்களை மூடியே வைத்துள்ளனர். இந்த அரிய பூச்சி படையெடுப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து துல்லியமான அறிவியல் விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version