பழனியில் ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் உள்ள மில் ரோடு பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்யபாமா இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று அதிகாலையில் தீவிர சோதனை நடத்தினர். கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியின்போது நில அளவீட்டில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சிக்கிய இவரது சொத்துக்களை ஆராயும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்யபாமா நெடுஞ்சாலைத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். சமீபத்தில் மே மாதம் ஓய்வு பெறுவதற்கு முன்பாக சென்னையில் பணியாற்றி வந்தார். கரூரில் சாலை திட்டத்தின் நில அளவீடு தொடர்பான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பணியில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஈடுபட்ட நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் சத்யபாமாவும் ஒருவர்.

இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஓய்வு பெற்ற பின்னரும் இவர் முறைகேடாக அதிக சொத்துக்களை சேர்த்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது. திருநெல்வேலியில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் குழு, ஏடிஎஸ்பி மெக்சலின் எஸ்குவின் தலைமையில் செயல்பட்டது. ஜான் பெஞ்சமின், ராபின்சன் உள்ளிட்ட இரு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மொத்தம் 10 பேர் கொண்ட குழு இரு கார்களில் வந்து சத்யபாமாவின் இல்லத்தைச் சுற்றி வளைத்தது.

சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின்போது இல்லத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்தனர். சொத்து விவரங்கள், வங்கி ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை தொடர்பான காகிதங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நீண்ட நேரம் சோதனை நடத்துவது அரிதான காட்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் பல அதிகாரிகள் மீதும் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், சத்யபாமாவிடம் விசாரணை நடத்தி வருவதுடன், அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் தகவல்களைப் பெற்று வருகின்றனர். மொத்த சொத்து மதிப்பு, வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் இருந்தால் அவை குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version