காரைக்குறிச்சி கிராமத்தில் மின்சார தட்டுப்பாடு மற்றும் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத இந்த மின்தடைகள் இரவு நேரங்களில் அதிகம் நீடிப்பதால், மக்கள் தூக்கமின்றி கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மின்சார தட்டுப்பாடு நீடிப்பதால் குடிநீர் ஏற்றும் மோட்டார்கள் இயங்காத நிலையில், கிராமத்தில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கும் மேலாக சரியான குடிநீர் கிடைக்காததால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் சேகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அவர்களின் அன்றாடப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தப் பதிலும் கிடைக்காததால் அதிருப்தியடைந்த மக்கள் உடனடி நடவடிக்கைக்கு இறங்கினர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி பிளாஸ்டிக் குடங்களுடன் காரைக்குறிச்சி சிவன் கோவில் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். “மின்சாரத் தட்டுப்பாட்டை உடனடியாகத் தீர்க்கவும், குடிநீர் விநியோகத்தை சீரமைக்கவும்” எனக் கோஷங்கள் எழுப்பிய அவர்கள், ஜோசப் விஜய் அரசை கடுமையாக விமர்சித்தனர். போராட்டம் தீவிரமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், “சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து உறுதிமொழி அளித்தால்தான் போராட்டத்தை வாபஸ் பெறுவோம்” என மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

பின்னர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மக்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் பிரச்சினையை விரைவில் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததையடுத்து, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக காரைக்குறிச்சி – தா.பழூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version