பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 30 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டால், அவர்கள் பதவியில் இருந்து நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்யப்படக் கூடாது என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.

அரசியலமைப்பு (130-வது திருத்தம்) மசோதா, 2025-ஐ ஆய்வு செய்து வரும் பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு, தனது வரைவு அறிக்கையில் இந்த முக்கிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. அதன்படி, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த புதிய மசோதாவின்படி, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்ற வழக்குகளில், பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் கைதாகி, தொடர்ந்து 30 நாட்கள் பிணையின்றி சிறையில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவியை இழப்பார்கள் என்ற விதி முன்வைக்கப்பட்டது. சிறையில் இருந்தபடி ஆட்சியை நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து 30 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கும் பொதுப் பிரதிநிதிகளை பதவியில் இருந்து நிரந்தரமாக “நீக்குவதற்கு” பதிலாக, அவர்களை தற்காலிகமாக “இடைநீக்கம்” செய்யலாம் என்று கூட்டுக்குழு பரிந்துரைத்துள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கப்படும்போதோ, நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என அறிவிக்கப்படும்போதோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் அரசுத் தரப்பு வழக்கை நிரூபிக்கத் தவறும்பாலோ, இந்த தற்காலிக இடைநீக்கம் தானாகவே ரத்தாகி, அவர்கள் மீண்டும் பதவியைப் பெற வழிவகை செய்யப்பட வேண்டும் என்று குழு கூறியுள்ளது.

பிணையில் வெளிவர கடினமான விதிகளைக் கொண்ட பிஎம்எல்ஏ (PMLA) மற்றும் உடன்பாடற்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக சிவில் சமூக அமைப்புகள் கவலை தெரிவித்தன. இதைக் கருத்தில் கொண்டு, இயற்கை நீதிக்கு முரணாக இந்த சட்டம் மாறிவிடக் கூடாது என்பதற்காகவே ‘இடைநீக்க’ முறையை குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் வரும் “கடுமையான குற்றங்கள்” எவை என்பதைத் துல்லியமாக வரையறுக்கவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த திருத்தங்களுடன் கூடிய இறுதி அறிக்கை விரைவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது தெரிகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version