வழக்குகள் கழுத்தை நெறிப்பதால் கட்சி மாறுகிறார்கள் என தவெகவில் இணையும் அதிமுகவினர் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பொள்ளாச்சி ஜெயராமன்.

அதிமுகவை விட்டு வெளியேறி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தங்கள் சுயநலத்துக்காகவே கட்சி மாறுவதாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமீப காலமாக அதிமுக-வில் இருந்து பல முக்கிய புள்ளிகள் தவெக-வுக்கு இணைவது அரசியல் வட்டாரத்தில் பேச்சாக உள்ள நிலையில், இது தொடர்பாக கோவையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தனது கருத்தை தெரிவித்தார். அதில், “அதிமுக-வை விட்டுச் செல்பவர்கள் அனைவரும் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே மாறுகின்றனர். அவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தல், ஊழல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவுமே அவர்கள் புகலிடம் தேடுகின்றனர்” என்று தெரிவித்தார்.

மேலும், “அதிமுக-விற்கு துரோகம் இழைத்துச் செல்பவர்களின் பின்னணியில் வழக்குப் பயம் மட்டுமே உள்ளது” என அவர் ஓப்பனாகக் குற்றம் சாட்டியுள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுக-வின் அடித்தள வாக்குகளை பெரிதும் நம்பியிருக்கும் சூழலில், இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வில் இருந்து த.வெ.க-வுக்கு நிர்வாகிகள் இடம் மாறும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், கட்சியின் உள் இயக்கம் பலவீனப்படுவதாக மூத்த தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மறுபுறம், தவெக தரப்பில் இத்தகைய இணைப்புகள் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக கொங்கு பகுதியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிமுக-வின் ஒற்றுமைக்கு சவாலாக இந்த மாற்றங்கள் அமையுமா என்பது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில் தெளிவாகும். பொள்ளாச்சி ஜெயராமனின் இந்த வீடியோ பேச்சு, அ.தி.மு.க-வினரிடையே புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version