எரிபொருட்கள் வாங்குவதை குறைக்க தேவையற்ற அரசு வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருள் சிக்கன அழைப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில அரசு தனது நிர்வாகச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் வகையில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் கைலாஷ்நாதன் பிறப்பித்த உத்தரவின்பேரில், அரசு சார்பு செயலாளர் முருகேசன் வெளியிட்ட சுற்றறிக்கை அனைத்து துறைத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை செயலாளர் சரத் சவுகான் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன. அரசின் சொத்துக்களை முறையாகப் பயன்படுத்தி, எரிபொருள் நுகர்வை பெருமளவு குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

வெளிப்பயணங்கள் தடை: அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்கள், கல்விச் சுற்றுப் பயணங்கள் மற்றும் ஆய்வுப் பயணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு வாகனப் பயன்பாட்டில் கட்டுப்பாடு: அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களை மிகுந்த சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டும். வாகனப் பகிர்வு (கார் பூலிங்) முறையை கட்டாயமாகப் பின்பற்றி, தேவையற்ற வாகனப் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். எரிபொருள் கொள்முதலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும். மேலும், துறைகளுக்கு இடையிலான கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள், ஒருங்கிணைப்பு கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பயணச் செலவுகள் பெருமளவு குறையும்.

பொதுப் போக்குவரத்து ஊக்குவிப்பு: அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் அலுவலகப் பயணங்களுக்கு முடிந்தவரை பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் எரிபொருள் சேமிப்பை அதிகரிக்க முடியும்.

மின்சார சேமிப்பு: அலுவலகங்களில் பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் விளக்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், கணினிகள் உள்ளிட்ட மின்சாதனங்களை அணைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் மின்சார பயன்பாட்டையும் கணிசமாகக் குறைக்கலாம்.

மதிய உணவு வழிகாட்டுதல்: அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதிய உணவு நேரத்தில் வீட்டுக்குச் செல்லாமல், உணவை அலுவலகத்துக்கு எடுத்து வருமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரமும் எரிபொருள் செலவும் மிச்சமாகும்.

வளர்ச்சி ஆணையர், அனைத்து ஆணையர்கள், அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலகத் தலைவர்கள் இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் புதுச்சேரி அரசின் நிர்வாகச் செலவுகள் கணிசமாகக் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version