இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரலாற்றில் முதன்முறையாக காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகளை அறிமுகப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (Expression of Interest – EoI) கோரப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ‘ஒபேசிஃபைட்’ பாலிமர் தாள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த செயல்முறையில் பங்கேற்க முடியும். தற்போது சோதனை அடிப்படையில் 68,000 ரீம் பாலிமர் தாள்கள் தேவைப்படுகின்றன. இதில் 34,000 ரீம்கள் ஒவ்வொரு இரு வெவ்வேறு மதிப்பிலான நோட்டுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால், படிப்படியாக பெரிய அளவில் பாலிமர் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள்: தேசிய பாதுகாப்பு கருதி இந்த டெண்டரில் மிகக் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும். சீனா அல்லது பாகிஸ்தானில் தொழில்முறை தொடர்புகள் இருந்தால் அவற்றை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும். மேலும், இந்த ஒப்பந்தத்துக்கான மூலப்பொருட்களை அந்த நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யக் கூடாது. இந்தியாவுக்காக தயாரிக்கப்படும் பாலிமர் தாள்களை வேறு எந்த நாட்டுக்கும் வழங்க அனுமதி இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய வங்கிகள் அல்லது நோட்டு அச்சிடும் நிறுவனங்களுக்கு பாலிமர் தாள்கள் வழங்கிய அனுபவம் இருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதி.

நன்மைகள் என்ன? பாலிமர் நோட்டுகள் காகித நோட்டுகளை விட அதிக உறுதியானவை. தேய்மானம், கிழிதல், ஈரப்பதம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு அதிகம். எனவே நீண்ட காலம் பயன்படுத்தலாம். இதனால் அடிக்கடி புதிய நோட்டுகள் அச்சிடும் செலவு கணிசமாகக் குறையும். RBI-யின் 2025-26 அறிக்கையின்படி, நோட்டு அச்சிடும் செலவு முந்தைய ஆண்டை விட கால் பங்கு குறைந்து ரூ.4,875 கோடியாக சுருங்கியுள்ளது. இருப்பினும், புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு மார்ச் 2026 நிலவரப்படி 12 சதவீதம் உயர்ந்து ரூ.41.23 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருகிய போதிலும், ரொக்கப் பணத்தின் தேவை இன்னும் குறையவில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த மாற்றம் இந்தியப் பொருளாதாரத்தின் பாதுகாப்பு மற்றும் திறன் இரண்டையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல நாடுகள் (ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்டவை) ஏற்கெனவே பாலிமர் நோட்டுகளை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version