கடந்த 1999ஆம் ஆண்டு தனக்கும் நடிகர் விஜய்க்கும் நடந்த திருமணத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகை ஒருவருடன்,விஜய் தொடர்பில் உள்ளதாகவும், கண்ணியமாக பிரிவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், விவாகரத்து வழங்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும், நியாயமான நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், நீலாங்கரை இல்லத்தில் வசிக்க உரிமை வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரிட்டனை சேர்ந்த தனக்கு வசிப்பதற்கு வீடு இல்லாத காரணத்தால், நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினால், நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க முடியாது என விஜய் தனது வழக்கறிஞர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது, விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதால் விஜய் வீட்டில் வசிக்க அனுமதி வழங்க மாட்டார் என்று சங்கீதா மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார். அனைத்து உரிமை மற்றும் வசதிகளுடன் நீலாங்கரை வீட்டில் தொடர்ந்து வசிக்க தனக்கு அனுமதி வழங்கா விட்டால் அது தனக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்த இடைக்கால உத்தரவை வழங்குவதால் விஜய்க்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
